இயக்குநர் சுசி கணேசன், சில ஆண்டுகளுக்கு முன்னர் காரில் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என மீ டூ மூலம் அம்பலப்படுத்தினார். இதை சுசி கணேசன் மறுத்தார். 

வாய்ப்பு தரவில்லை என்பதால் தன் மீது அபாண்டமாக பழி போடுகிறார், லீனா மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் மானநஷ்ட வழக்கு தொடருவேன் என கூறியிருந்தார். சுசி கணேசனுக்கு லீனா பதில் கொடுத்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது : சுசி கணேசனின் மறுப்பே அவரைக் காட்டிக் கொடுக்கிறது. 

என் சொந்த வாழ்க்கை என் மனதிற்கு மிகுந்த மிக மகிழ்ச்சியான வாழ்க்கை. அதன் வெற்றி தோல்வியை அவர் எப்படி தீர்மானிக்க முடியும். கவிஞராக என் இடமென்ன என்று என் படைப்புகளும் இலக்கிய வாசக உலகமும் சொல்லும்.

சினிமாவில், அவர் எடுத்த படங்களை விட மிக நல்ல படங்களையே எடுத்திருக்கிறேன். என் படங்களில் பொறுக்கிகள் ஹீரோக்கள் அல்ல. மனசாட்சியை விற்பவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். சுசி கணேசனை சந்திக்கும்போதே நான் கவிஞர், இயக்குனர். வாய்ப்பு கேட்கும் தேவையில் நான் இல்லை. 

அவரைப்பற்றிய பதிவு போட்டபிறகு பத்திரிகையாளர்களும் பெண்களும் அவரைக்குறித்த அதிபயங்கர தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள். அவர்களுக்கு தங்கள் அனுபவங்களைப் பகிரங்கப்படுத்தும் தைரியம் வாய்க்கட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.